Tuesday, July 5, 2016

துருக்கி - இஸ்ரேல் உடன்படிக்கை காஸா முற்றுகையை நீக்குமா?


ஆங்கிலத்தில்: யுவோன் ரிட்லி
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

நாம் ரமழானின் இறுதி நாட்களை கடத்தி வருகின்ற நிலையில், உலகெங்கும் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் தர்மங்கள் வழங்கி வருகின்றனர். வழமைபோன்றே, காஸாவும் அதிகளவு தேவைகளைக் கொண்ட பிரதேசமாக இருந்து வருகின்றது.

கடந்த ஒரு தசாப்த காலமாக காஸாவின் நிலை மோசமாக உள்ளது. இஸ்ரேலும், எகிப்தும் காஸாவை சூழ இட்டுள்ள முற்றுகை காரணமாக, மனிதநேய உதவிகளும், காஸாவின் உட்கட்டமைப்பை மீளக்கட்டியெழுப்பவதற்கான பணிகளும் தடைப்பட்டுப் போயுள்ளன. காஸாவில் இரண்டு மில்லியன் பலஸ்தீனியர்கள் வாழ்கின்றனர்.

எனது தனிப்பட்ட அனுபவத்தின்படி, உதவிகளில் தங்கியிருக்கும் நிலையை பலஸ்தீனாகள் விரும்புவதில்லை என்பதை அறிந்த வைத்திருக்கின்றேன். இருப்பினும், மோசமான முற்றுகை காரணமாக காஸாவில் வாழ்வோர் பெருமளவு வறுமையாலும், கஷ்டத்தாலும் துன்பம் அனுபவித்து வருகின்றனர். உண்மை சொல்வதென்றால், மேற்குக் கரையை ஆளும் பலஸ்தீன அதிகார காஸாவின் இந்நிலை குறித்து சந்தோசமாகவே உள்ளது. அரபுலகிலுள்ள பலஸ்தீன அதிகார சபையின் சில கூட்டாளிகளும் இது குறித்து சந்தோசமாகவே உள்ளன.


காஸாவில் வாழும் பலஸ்தீனர்கள் எவற்றையெல்லாம் இழந்திருக்கின்றனர்? இலட்சக் கணக்கானோர் பிழைப்பது நாளாந்த போராட்டமாயுள்ளது. அரபு மற்றும் சர்வதேச சமூகம் வாக்களித்த மீள்கட்டுமான திட்டங்கள் நிறைவேற்றப்படாது தோல்வியடைந்துள்ளன. 20089, 2012, 2014 ஆம் ஆண்டுகளில் இஸ்ரேல் பாடசாலைகளையும், மருத்துவமனைகளையும், சக்தி மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் தாக்கி சுக்குனூறாக்கியது. அது மட்டுமல்லாது, நூற்றுக் கணக்கான சிவிலியன்களின் வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டன. இந்த நிலை காரணமாக, ஜனநாயாக ரீதியாக தெரிவு செய்யப்பட்டன ஹமாஸ் அரசுக்கு பொது சேவைகளை தொடர்ந்தும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில், ஏலவே வரையப்பட்ட திட்டங்களும், நிதியும் இல்லாமல், எந்தவொரு அரசும் வெற்றி பெற முடியாது.

இந்த முற்றுகை கடந்த ஒரு தசாப்த காலத்தில் மட்டுமன்றி, கிட்டத்தட்ட 50 வருட காலமாக நிலவி வருகின்றது. 2008 ஆகஸ்ட் 23 ஆம் திகதி, காஸா கரையை அடைந்த எஸ்.எஸ். ஃப்ரீ காஸா மற்றும் எஸ்.எஸ். லிபெர்டி ஆகிய கப்பல்களில் பயணித்த ஊடகவியலாளர்களில் நானும் ஒருத்தி. நாம் காஸாவை அடைந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் எம்மை வரவேற்றனர். கடந்த 40 வருடங்களில் காஸா துறைமுகத்தை வந்தடைந்த முதலாவது கப்பல், நாம் வந்தடைந்த கப்பல்தான் என்று அங்கு பலரும் கூறினர். இஸ்ரேலின் முற்றுகை எவ்வளவு காலம் நீடித்து வருகின்றது என்பதற்க இது ஒரு உதாரணமாகும்.

துருக்கியின் தலையீட்டில் உருவாகியுள்ள புதிய உடன்படிக்கை இந்த முற்றுகையை நீக்கவே முயற்சிக்கின்றது. காஸாவில் வாழும் பலஸ்தினியர்களின் விவகாரம் குறித்த முன்னேற்றத்தையே இது காட்டுகின்றது. இது வரவேற்கப்படல் வேண்டும், அதே நேரம் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். முற்றுகையை நீக்குவது குறித்த துருக்கியின் வினயம் குறித்து எனக்கு எதுவித சந்தேகம் இல்லாதபோதும், இஸ்ரேலின் எண்ணம் குறித்து அதேயளவு நம்பிக்கை முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, முற்றுகையை அது தளர்த்துகிறது என்றுதான் சொல்ல முடியும்.

இந்த உடன்பாட்டின் ஏனைய பகுதிகளின்படி, 2010 மே மாதம், காஸாவுக்கு உதவிகள் கொண்டு சென்ற, துருக்கிய கப்பல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில் உயிர் துறந்த 10 துருக்கியர்களுக்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்ட ஈட்டை இஸ்ரேல் வழங்க வேண்டும். மன்னிப்புக் கோருகிறோம்! என்ற சொல்லோடு முடிவுறாத ஒரு நிகழ்வாக, பிராந்தியத்தில் இது அவதானிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் தரப்பு நஷ்ட ஈட்டுக்குப் பதிலாக, சர்வதேச நீர்ப்பரப்பில் துருக்கியின் மனிதநேய கப்பல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்த யுத்த குற்ற விசாரணைகளை நிறுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளைச் செய்வதாக ஜனாதிபதி ரஜப் தையிப் அர்தூகான் உடன்பட்டுள்ளார்.

பலஸ்தீனுக்கு உதவுவதிலும், அதனோடு ஒருமைப்பாட்டைத் தெரிவிப்பதிலும் நீண்ட கால வரலாற்றைக் கொண்டிருப்பதனால், அர்தூகானை வரவேற்று ஹமாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் முற்றுமையை நீக்கவும், இஸ்ரேலிய ஊடுறுவல்களை தடுக்கவும் துருக்கி செற்படும் என எதிர்பார்ப்பதாகவும் ஹமாஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் தனது வாக்குறுதியை காப்பாற்றுமா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனாலும், துருக்கியோடு சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்ள முடியாது. துருக்கி அந்தஸ்த்து ரீதியாக வளாந்து வரும் ஒரு நாடாகும். அத்தோடு, மேற்குடனும் கிழக்குடனும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளக்கூடிய ஒரு பிராந்திய சக்தி என்று துருக்கிய தன்னை அடையாளப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு செலவு வருமானத்தை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி, துருக்கியின் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது துருக்கி வகிக்கும் பாத்திரத்தை புலப்படுத்துகின்றது.

தம் நிலையை ஒரு பேரம் பேசும் கருவியாக பயன்படுத்தாது, தம்மை ஆதரித்து, தமக்காக பேசும், நம்பகரமான ஒரு பிராந்திய சக்தி உள்ளமை குறித்து பலஸ்தீனியர்கள் சந்தோசப்படல் வேண்டும்.

இன்னுமொரு முக்கியமான விடயம் என்னவென்றால், எகிப்துடனான உறவையும் பலப்படுத்துவதற்கு துருக்கிய தற்போது முயற்சித்து வருகின்றது. உடன்பாட்டுக்கு வரும் எந்தவொரு உடன்படிக்கை மூலமும், ரபாஹ் கடவை பகுதியில், காஸா மீது விதிக்கப்பட்டுள்ள முற்றுகை நீக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். 

No comments: