அஷ்கர் தஸ்லீம்
இன்றைய உலகம் நிலத்தால் வரையறை செய்யப்பட்ட “நாடு”களாக மாறியுள்ளது. ஒவ்வொரு நாடும் வித்தியாசமான இனங்களையும் மதங்களையும் பிரதிநித்துவம் செய்கின்ற மக்கள் தொகையைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு வேறுபட்ட இனங்களும் மதங்களும் உள்ள ஒரு சூழலில் கலாசார பன்மைத்துவத்தை அவதானிக்கலாம்.
கீழைத்தேய நாடுகள் பாரம்பரியமாகவே பல்வேறு இனங்கள் செறிந்து வாழும் இயல்பைப் பெற்றுள்ளன. உதாரணமாக இந்தியாவில் பலநூறு மொழிகளைப் பேசும் இனத்தவர்கள் வாழ்வதைக் குறிப்பிடலாம். இந்தியாவின் தெற்கில் உள்ளவர்களுக்கும் கிழக்கில் உள்ளவர்களுக்கும் இடையிலான வெளிப்புற தோற்றம் சூடானியர்கள், மங்கோலியர்கள் அளவு வித்தியாசமானது.
மேற்குலகும் பல் இன இயல்பைக் கொண்டிருந்தபோதும், கைத்தொழில் புரட்சிக்குப் பின்னர் இடம்பெற்ற குடியேற்றங்கள் காரணமாக, மேற்குலக நாடுகளில் ஆசிய இனத்தவர்களினதும் வட ஆபிரிக்கர்களினதும் பிரசன்னம் அதிகமாகியது.
பிரான்ஸில் 10 சதவீத அளவில் வடஆபிரிக்க அரபு முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஜேர்மனில் துருக்கியர்கள் மிகப் பெரும் அளவில் வாழ்கின்றனர். பாகிஸ்தானிகளும், இந்தியர்களும், பங்காளிகளும் மேற்கு நாடுகளில் பெருமளவு பிரசன்னத்தைக் கொண்டுள்ளனர்.