(அஷ்கர் தஸ்லீம்)
இஸ்லாமிய வரலாற்றில் நீண்ட நெடிய காலம் முஸ்லிம் சமூகத்துக்குத் தலைமைத்துவத்தை
வழங்கி வந்த இஸ்லாமிய கிலாபத் 1924 இல் இரத்துச் செய்யப்பட்டது.
அப்போது துருக்கிய உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கீழிலிருந்த நாடுகள் துண்டு துண்டாகின.
துருக்கி ஒரு மதச்சார்பற்ற நாடாக மாற்றப்பட்டது. துருக்கியர்களை விட்டும் இஸ்லாத்தை
தூரமாக்கி விடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கிலாபத்துக்குப் பிந்திய மதச்சார்பற்ற
ஆட்சியாளர் முஸ்தபா கமாலினால் மேற்கொள்ளப்பட்டன.
துருக்கியர்களை மதச்சார்பற்றோராக்குவதற்கான இந்த முயற்சிகளை எதிர்த்து செயற்பட்டவர்களுள்
இமாம் பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி முதன்மையானவர். 1876 ஆம் ஆண்டு துருக்கியின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள 'நூர்ஸ்' என்ற கிராமத்தில் ஸஈத் நூர்ஸி
பிறந்தார். இவரது தந்தை மிர்ஸா ஒரு சூபியாவார். ஸஈத் நூர்ஸி தன் இள வயதிலேயே மார்க்க
மற்றும் ஏனைய துறைகளில் சிறந்த கல்வியைப் பெற்றுக் கொண்டார்.