சட்டத்தரணி கே.டபிள்யூ ஜனரஞ்சன அவர்கள் பிலியன்தலயைச்
சேர்ந்தவர். 1991 களில் ராவய பத்திரிகையில் கார்டூன் ஓவியராக இணைந்தார். பின்னர்,
அதன் உதவி ஆசிரியராகப் பணி புரிந்தார். தற்போது அதன் பிரதம ஆசிரியராகப்
பணியாற்றுகிறார். மீள்பார்வைக்காக அவருடன் மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களோடு
பகிர்ந்து கொள்கிறோம்.
நேர்காணல் – அஷ்கர் தஸ்லீம், இன்ஸாப் ஸலாஹுதீன்
நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலை எப்படி
நோக்குகிறீர்கள்?
மாகாணசபை தேர்தலை நோக்கும் போது நாம் ஒன்றைப் புரிந்து
கொள்ள வேண்டும். உண்மையில்
இந்தத் தேர்தல் வடக்கிற்கு மாத்திரம் உரிய தேர்தல்தான். அல்லது வடக்கில் மாத்திரம் நடைபெற்றிருக்க வேண்டிய
தேர்தலாகும். வடக்கில்
அரசாங்கம் தோல்வியைத் தழுவும் என்பதனை அறிந்தே இருந்தது. அதனை சமப்படுத்துவதற்காகவே மத்திய, வடமேல்
மாகாணங்களில் தேர்தலை நடத்த வேண்டி வந்தது. வடக்கின் தோல்வியை இந்த இரண்டினதும்
வெற்றியைக் கொண்டு சமப்படுத்துவதே இதன் நோக்கம். சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இந்த இரண்டையுமே அழுத்தம்
கொடுத்துப் பேசின.
எங்களைப் பொறுத்த மட்டில் வடக்கின் தேர்தல்
முக்கியமானது. ஆனால், அவர்களது தேர்தல் விஞ்ஞாபனம் பல புரளிகளைக் கிளப்பியது. சிங்கள பௌத்தர்களுக்கு மத்தியில் இது
தனிநாட்டுக் கோரிக்கையை கொண்டது, நாட்டைப் பிரிக்கும் உள் நோக்கம் கொண்டது
என்ற கருத்துக்கள் பரப்பப்பட்டன. இது ஜனநாயக நீரோட்டத்தில் அவர்களுக்குக் கிடைத்த
முதல் சந்தர்ப்பமாகும். எனவே, அவர்களது பயணம் எப்படி அமையப் போகின்றது
என்பதை அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.