ஜம்இய்யதுல் உலமா உட்பட இலங்கை முஸ்லிம் சமூகத்தில் உள்ள சிவில் சமூக நிறுவனங்கள், தரீக்காக்கள், இஸ்லாமிய அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகள் சார்ந்த நிறுவனங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதும், பொது இலக்குகளுக்காக அனைவரும் ஒன்றிணைந்து தேசிய மட்டத்தில் செயற்படுவதற்குமான ஒரு சிறந்த பொறிமுறை அடையாளம் காணப்பட்டு அதனைச் சாத்தியப்படுத்த வேண்டும் என்பது எனது மிகப்பெரும் எதிர்பார்ப்பாகும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் தெரிவித்தார். அவர் வழங்கிய முழுமையான நேர்காணலை கீழே வாசிக்கலாம்.
நேர்காணல்: அஷ்கர் தஸ்லீம்
உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, இலங்கை முஸ்லிம்களின் நிலை எவ்வாறு உள்ளது?
எவரும் எதிர்பாராத விதத்தில் நடந்த இந்த துன்பியல் நிகழ்வு, நாட்டை உலுக்கியது போல, இலங்கை முஸ்லிம்களில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதை நாம் அறிவோம். இப்பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இலங்கை முஸ்லிம் சமூகம் ஒருமித்த குரலில் அதனை முற்றுமுழுதாக ஆட்சேபித்ததோடு, மனிதாபிமான கண்ணோட்டத்திலும் பண்பாட்டுக் கண்ணோட்டத்திலும் இஸ்லாமியக் கண்ணோட்டத்திலும் இந்த ஈனச் செயலை கண்டித்தது.