அஷ்கர் தஸ்லீம்
சமகால சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு, இலங்கை முஸ்லிம் அரசியல் புனருத்தாரணம் செய்யப்படல் வேண்டும் என்பது தவிர்க்க முடியாத வாதமாக தற்போது எழுந்து வருகின்றது. இவ்வளவு காலமும் முஸ்லிம் அரசியல் எவ்வாறான பாத்திரத்தை வகித்து வந்தது என்ற வரலாற்றை ஒருகணம் மீள்விசாரணை செய்து, அதில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலையில் முஸ்லிம் அரசியல் உள்ளது.
மன்னர் காலம் தொட்டு இன்று வரையிலான முஸ்லிம் அரசியலை பல்வேறு பகுதிகளாகப் பிரித்து நோக்க முடியும். இந்த ஒவ்வொரு காலப் பகுதியிலும், இந்த நாட்டின் தலைமைத்துவங்களோடு சேர்ந்து, இந்த நாட்டை வளப்படுத்தும் பணியில் முஸ்லிம் அரசியல் பங்களிப்பு செய்திருப்பதை அவதானிக்கலாம்.
ஆனால், பல்வேறு அரசியல் கருத்தியல்கள் செல்வாக்கு செலுத்துகின்ற, இந்த நவீன யுகத்தில், முஸ்லிம் அரசியலின் போக்கு எவ்வாறு அமைய வேண்டும் என்பது முக்கியமானதாகும். இதற்காக, தற்போதைய முஸ்லிம் அரசியலை விமர்சனபூர்வமாக நோக்குவது தவிர்க்க முடியாத காரணியாக உள்ளது.