Saturday, July 12, 2014

கிண்ணியா - மங்கோலியா - ஆபிரிக்கா


கடந்த மே மாதம் (2014) இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள கிண்ணியாவுக்கு சென்றிருந்தேன். கிண்ணியா முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசம். அங்கிருந்தபோது நான் கிண்ணியா மக்கள் குறித்து முகநூலில் இட்ட ஒரு பதிவையும், அதற்கு இடப்பட்ட பின்னூட்டங்களில் தெரிந்தெடுத்த சிலவற்றையும் வலைத்தளத்திலும் பதிகிறேன். இங்கு பதிவேற்றியுள்ள படங்கள் மங்கோலிய மலாய, ஆபிரிக்க முகசாயலைக் காட்டுவதற்கான படங்களேயன்றி, கிண்ணியாவைச் சேர்ந்தவர்களுடையதல்ல.


தற்போது நான் கிண்ணியாவில் உள்ளேன். இதற்கு முதல் 5, 6 தடவைகள் கிண்ணியாவுக்கு வந்தும் உள்ளேன்.


நாம் தரிசிக்கும் ஊர்களின் வரலாறு, பண்பாடு, கலாசாரம் மற்றும் அந்த ஊர் பற்றிய இன்னோரன்ன விடயங்களையும் கேட்டறிந்து கொள்வது சுவாரஷ்யமானது.


நான் கிண்ணியாவுக்கு வரும்போதெல்லாம், இங்குள்ளவர்களின் முக சாயல்களை அதிக ஆர்வத்துடன் அவதானிப்பேன்

சிறிய கண்களையுடைய, சிறியதாக வளர்ந்த தாடியுடைய மஞ்சள் நிற மங்கோலிய சாயலுடைய முகங்களை இங்கு அதிகம் காண்கிறேன்.

அத்தோடு, தடித்த உதடுகளையுடைய, சுருட்டை முடிகொண்ட ஆபிரிக்க சாயலையுடைய முகங்களையும் இங்கு காண்கிறேன்.

உண்மையில், இலங்கை முஸ்லிம்கள் ஒற்றை இனத்தவர்களல்லர். முஸ்லிம்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்றனர். ஆனால், அவர்கள் பல இனத்தவர்களாகவே உள்ளனர்.

தற்போது, பல இனங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் அனைவரையும் கலந்துபோய் தமிழைப் பேசி வருகின்றனர்.


இந்தப் பி்ன்னணியில்தான் கிண்ணியாவில் நான் காணும் மங்கோலிய மலாய சாயலைக் கொண்ட முஸ்லிம்களையும், ஆபிரிக்க முக சாயலைக் கொண்ட முஸ்லிம்களையும் நோக்குகிறேன்.

குறிப்பு- இது பெரிய ஆராய்ச்சி ஒன்றுமில்லை. சும்மா சொல்லனும் என்று தோன்றியது. சம்பந்தப்பட்ட முகங்களைப் படம் பிடித்து போடனும் என்று நினைத்தேன். நேரம் கிடைக்கல்ல.


பின்னூட்டங்கள்

Mohamed Abdullah உண்மைதான். நானும் பல தடவை கிண்ணியா போகும்போது, அங்குள்ளவர்களின் முக சாயல்களை அதிக ஆர்வத்துடன் கவனித்திருக்கிறேன். வேறொரு நாட்டுக்கு சென்ற மாதிரி ஒரு உணர்வு ஏற்படும். 

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் மீள்பார்வை இதழில் வெளியான, கிண்ணியா வரலாறு தொடர்பான தொடர் கட்டுரை ஒன்றை படித்திருந்தேன். அதில் இது குறித்து கட்டுரை ஆசிரியர் பேசியிருந்தார்.


Riham Mohammed Ashkar Thasleem சகோ இனத்தினை எதனடிப்படையில் பிரித்தீர்கள் ? முஸ்லீம்கள் என்பது ஒரு இனமில்லையா?

Hafiz Mohamed இல்லை முஸ்லிம்கள் என்பது ஒரு இனமல்ல. அதை விட வலிமையான தேசம். பல இனத்தவர்களை கொண்ட ஒரு தேசம்

Riham Mohammed Ashkar Thasleem Hafiz Mohamed இனத்தினை எதை கொண்டு வரையறுக்கிறீர்கள் ? இலங்கையில் தமிழ் பேசும் நாங்கள் தமிழர்களா? ஏன் நாம் தமிழர்கள் என சொல்லிக் கொள்வதில்லை. அவ்வாறு நான் தமிழன் இல்லை எனில் எனது இனம் என்ன ?

Ashkar Thasleem Riham Mohammed சிங்களம் என்பது இனம். அவர்களில் பலர் பௌத்த மததத்தையும் சிலர் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுகின்றனர்.

தமிழ் என்பது இனம். அவர்களில் பலர் இந்து மதத்தையும் சிலர் கிறிஸ்தவ மததத்தையும் பின்பற்றுகின்றனர்.

வேடர் என்பது இனம் அவர்களில் சிலர் பௌத்த மததத்தையும் இன்னும் சிலர் தமது மூதாதையரின் நம்பிக்கைகளையும் பின்பற்றுகின்றனர்.

அரபு என்பது இனம். அவர்களில் பலர் இஸ்லாம் மதத்தையும் சிலர் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுகின்றனர்.

எனவே, இனம் என்பது நாம் பின்பற்றும் மதத்தை வைத்து தீர்மானிக்கப்படும் ஒரு விடயமல்ல. முஸ்லிம் என்பதன் கருத்து 'இஸ்லாத்தைப் பின்பற்றுபவர் / சரணடைந்தவர்' என்பதுதான். இது எப்படி இனமாக முடியும்?

இலங்கையில் மலாயர்கள், மாலைதீவர்கள், வட இந்திய இனங்களைச் சேர்ந்தவர்கள் என பல இனக் குழுமங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றன. இலங்கையில் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களில் மிகுந்த சனத்தொகையைக் கொண்ட இனம் தமிழ் மொழியையே பேசுகின்றது. 

இருப்பினும், தமிழ் மொழி பேசுவதால் இவர்களை தமிழர்கள் என்று அழைப்பதா? அல்லது தம்மை நீண்ட காலமாக அவர்கள் 'சோனகர்கள்' என வழங்குவதால் சோனகர்கள் என்று அழைப்பதா என்பதில் தீர்வு எதுவும் இதுவரை இல்லை.

இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும்போது, அதில் கோட்பாடு ரீதியில் இன, குல பாகுபாடுகள் காட்டப்படாமையினால் அனைவரும் சமமானவர்களாகக் கருதப்படுகின்றனர். எனவே, இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவோர் தமது இன அடையாளத்தை முற்படுத்தாமல், மத அடையாளத்தை முற்படுத்துகின்றனர் போலும்.

எனவே, முஸ்லிம் என்பது இனமல்ல என்பதுவே எனது கருத்து. அல்லாஹு அஃலம்.

Riham Mohammed நான் கேட்ட வினாவிற்க்கான பதில் இன்னும் வரவில்லையே , இனம் என எதைக் கொண்டு பிரிகிறீர் ? எது இனத்தின் பிரி கோடு ? மொழியா ? மதமா ? நீங்கள் மொழி ரீதியான பிரிவை தான் இனம் என கருதுகிறீரா ?

நான் அறிந்த வகையில் இனமானது கலாசாரத்தின் பால் மிகவும்தங்கியுள்ளது. சிங்கள் கிறிஸ்த்வரிடமிருந்து தமிழ் கிறிஸ்த்தவன் எவ்வாறு வேறுபடுகிறான் ? அவனின் கலாசாரத்தினால் தானே ஒழிய மொழி மாற்றத்தினால் அல்ல.
மொழியானது சில போது தன்னகத்தே கலாசாரங்களை உருவாக்கியுள்ளது. பௌத்தம் ஒரு போதும் காலாசர நிகழ்வுகளை ஆதரிக்காது . ( பௌத்தில் பண்டிகை என்பது கிடையாது .அது மூட நம்பிக்கை கூட ) இருப்பினும் சிங்கள இனம் ஒர் கலாசாரத்தினை பின்பற்றுகிறது. அது கிறிஸ்தவனு பின்பற்றுவான் . இருப்பினும் முஸ்லீம் ஆகிய நாம் எந்த கலாசார்த்தினை பின்பற்றுகிறோம்? மலாயர்களின் கலாசாரம் தெளிவாக வேறுபடுகிறது அவர்கள் முஸ்லீம்களாக இருப்பினும் கூட. 

உங்களின் பதிவின் படி புற தோற்ற அமைப்பினை கொண்டு இனம் வரையறுக்கப்பட்டுள்ளது . கிண்ணியா முஸ்லீம்களின் கலாசாரப் பிண்னணி சாதாரண இலங்கை வாழ் முஸ்லீம்களின் கலாசாரமே ஆகும். என்றால் மிகையாகாது.

Riham Mohammed சிங்களம், தமிழ், வேடர், அரபு இங்கே மொழியியல் ரீதியான பாகுபாட்டினை தாண்டி கலாசார வேறுபாடு உள்ளது.
தமிழ் கலாசாரத்தின் முக்கிய பகுதிகள் மததினை பாராது பின்பற்றப்படும் ஆனாலும் முஸ்லீம்கள் அவற்றினை பின்பற்ற மாட்டார்கள் உதாரணம் தைப்பொங்கல். ஆக நாம் கலாசார ரீதியாக ( மொழி ஒன்றாக இருப்பினும் ) வேறுபடுகின்றோம். 

துருக்கியில் குர்திய இனம் முற்று முழுதாக முஸ்லீம்களாலானாலும் அவர்களுக்கே உரிய கலாசாரம் அவர்களிடம் காணப்படுகிறது. அவர்களின் மொழி , நடை உடை பாவனை என்பன பாரியளவில் துருக்கிய மக்களிடத்தில் நின்றும் வேறுபடுகிறது.

Riham Mohammed //சிறிய கண்களையுடைய, சிறியதாக வளர்ந்த தாடியுடைய மஞ்சள் நிற மங்கோலிய சாயலுடைய முகங்களை இங்கு அதிகம் காண்கிறேன்.
அத்தோடு, தடித்த உதடுகளையுடைய, சுருட்டை முடிகொண்ட ஆபிரிக்க சாயலையுடைய முகங்களையும் இங்கு காண்கிறேன்.
உண்மையில், இலங்கை முஸ்லிம்கள் ஒற்றை இனத்தவர்களல்லர். முஸ்லிம்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்றனர். ஆனால், அவர்கள் பல இனத்தவர்களாகவே உள்ளனர்.
தற்போது, பல இனங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் அனைவரையும் கலந்துபோய் தமிழைப் பேசி வருகின்றனர்.
இந்தப் பி்ன்னணியில்தான் கிண்ணியாவில் நான் காணும் மங்கோலிய மலாய சாயலைக் கொண்ட முஸ்லிம்களையும், ஆபிரிக்க முக சாயலைக் கொண்ட முஸ்லிம்களையும் நோக்குகிறேன்//// 

இங்கு இனம் என வரையறுத்து எதனடியாக ?

Ashkar Thasleem  மொழி மற்றும் உயிரியல் விடயங்களை வைத்துத்தான் இனங்கள் பகுப்பட்டுள்ளதாகவே நான் அறிகிறேன். கலாசார வேறுபாடுகளை வைத்து இனங்கள் பிரிககப்படுகின்றதா? அது பற்றி துறைசார் அறிஞர்கள் என்ன மாதிரியான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி எனக்குத் தெரியாது. உங்கள் கேள்வி இது குறித்து இன்னும் தேடுமாறு என்னைத் தூண்டுகின்றது. அது பற்றி நான் இன்னும் வாசிக்க வேண்டும். வாசித்து விட்டு பின்னூட்டமிடுகின்றேன். ஜஸாகல்லா...

No comments: