Saturday, September 21, 2013

வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிராக ஒருமைப்பாட்டுக்கான பேரணி


சிறுபான்மைகளுக்கு எதிரான ஒரு இனவாதப் போக்கு இலங்கையில் தலைதூக்கி வருவதை நாம் அறிகிறோம். இந்த நடவடிக்கைகள் நாட்டில் மீண்டுமொரு இனப் பிரச்சினையை உருவாக்கிவிடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. எனவே, வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிரான ஒருமைப்பாட்டுக்கான பேரணி (Rally for Unity) என்ற பெயரில் கொழும்பிலும் மாதரையிலும் இரு பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த பேரணிகளை இனம் மதம் சாராது மூவினங்களையும் சேர்ந்த இளம் செயற்பாட்டாளர்கள் இணைந்து நடாத்தியுள்ளனர். ஒருமைப்பாட்டுக்கான பேரணிகளை (Rally for Unity)  ஏற்பாடு செய்த குழுவைச் சேர்ந்த பிரதிபா பெரோ, பிரபுதீபன், அப்துல் ஹாலிக் அஸீஸ் ஆகியோரை மீள்பார்வைக்காக சந்தித்தேன்.
நேர்காணல்: அஷ்கர் தஸ்லீம்

ஒருமைப்பாட்டுக்கான பேரணி (சுயடடல கழச ரnவைல) திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது! இது என்ன?

பிரதிபா பெரேரா:

பிரதிபா பெரேரா
நாம் அன்றாடம் சாப்பிடுகிறோம். அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறோம். இதுபோன்றே கருத்தைச் சொல்வதற்கான சுதந்திரம், நண்பர்களுடன் பழகுதல், சமத்துவம் எனபனவும் எனது அன்றாடத் தேவைகள்தான். ஏனையோருக்குத் தொந்தரவு கொடுக்காது எனது விருப்பம்போல் நண்பர்களுடன் பழகுவதற்கும் எனது கருத்துக்களை வெளியிடுவதற்கும் யாரேனும் தடை விதித்தால் அது பிரச்சினையே.

சமீபத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் என்னைப் போன்றே எனது ஏனைய சகோதரர்களுக்கும் அவர்களது தனித்துவத்தைப் பேணி வாழ்வதற்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கும் ஒரு சாதாரண பிரஜையாக வாழ்வதற்கும் தடையாய் அமைந்து வருகின்றன.

நான் சாப்பிடுவதை யாரேனும் தடுப்பதாயின் நான் அதற்கெதிராகப் பேசுவேன். எனது வீட்டை யாரேனும் பறித்துக் கொள்வதாயின் நான் அதற்கெதிராகப் பேசுவேன். இதுதான் ஒருமைப்பாட்டுக்கான பேரணியின் (Rally for Unity) பின்னணி.




இந்தக் குழுவில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என அனைவரும் இணைந்து செயற்படுகிறீர்கள். இந்த நிலையில் உங்களது உணர்வுகள் எப்படி இருக்கின்றன?

பிரபுதீபன்:

பிரபுதீபன்
நாம் நீண்ட காலமாகவே தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், பர்கர் என அனைவரும் இணைந்து செயற்படுகிறோம். எனவே, நாம் இணைந்து செயற்படுவது என்பது எமக்குப் புதியதொரு விடயமல்ல. இப்படியிருக்கையில் தற்போது நிகழ்ந்து வரும் விடயங்கள்தான் எமக்கு ஆச்சரியமாக உள்ளன.

இலங்கையின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையில்தான் நாம் இந்த பேரணிகளை ஏற்பாடு செய்திருந்தோம். இது எந்த இனமோ, சாதியோ முன்னெடுக்கும் ஒரு விடயமல்ல. இலங்கையர் என்ற வகையில் நாம் இதனை மேற்கொள்கின்றோம்.

நாம் ஒன்றாக சேர்ந்து பழகுவதற்கு இனம் ஒரு தடையாக அமைந்ததில்லை. இனியும் அப்படி அமையாது. எம்மை விடவும் பெரியதொரு தொகையினருக்கு இந்த சிந்தனை இருக்கின்றது. இதனை வெளியே கொண்டு வருவதற்குத்தான் நாம் இவ்வாறான வேலைகளை செய்கின்றோம்.

ஒருமைப்பாட்டுக்கான பேரணிகளுக்கான அழைப்பை சமூக ஊடகங்களான பேஸ்புக் மற்றும் டிவிட்டர் ஊடாகவே மேற்கொண்டீர்கள். இலங்கையைப் பொறுத்தவரையில் இதுவொரு புது முயற்சி. இதை நீங்கள் எப்படி கையாண்டீர்கள்?

பிரபுதீபன்:

மக்களை ஒன்று திரட்டுவதற்காக நாம் சமூக ஊடகங்களை (பேஸ்புக், டிவிட்டர்) பயன்படுத்தினோம். இது உண்மையில் வெற்றிகரமான முறை. ஆனால், நாம் மாதரையில் ஒருமைப்பாட்டுக்கான பேரணியை ஒழங்குபடுத்தியபோது மக்களை சென்று சந்தித்து அழைப்பு விடுத்தோம்.

நாம் ஒருமைப்பாட்டுக்கான பேரணி என்ற இந்த நிகழ்வை மாத்திரம் ஊக்குவிக்கவில்லை. நாம் ஒரு சிந்தனையை ஊக்குவிக்கிறோம். எனவே, பலருக்கும் இந்த சிந்தனையைக் கொண்டுபோக நாம் முயற்சிக்கிறோம்.

சமூகத்துக்கு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

ஹாலிக் அஸீஸ்:

ஹாலிக் அஸீஸ்
ஒரு தனிநபர் என்ற வகையில் நான் இந்த செயற்பாடுகளில் பங்குகொள்கிறேன். ஏனெனில், எனது வாழ்க்கையில் அநீதியை நான் அங்கீகரிப்பதில்லை., நாம் விசுவாசிக்கும் எமது பெறுமானங்களும், ஏனைய சகோதரர்களும் பாதிக்கப்படும்போது என்னால் அமைதியாக இருக்க முடியாது.

எவரையேனும் பாதிக்கும் விடயங்கள் இருப்பதாயின், நீங்கள் அதை அங்கீகரிப்பதில்லையாயின் அமைதியாக இருந்து விட வேண்டாம். அதற்கெதிராகக் குரலெழுப்புங்கள். ஆனால், மீண்டும் ஒரு பிரச்சினையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். வன்முறையையும் நெருக்கடிகளையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த வகையில்தான் இலங்கைக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கொண்டு வரலாம். வாசகர்களே! மீண்டும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். மௌனிகளாக இருந்து நாளைகளுக்காகக் காத்திருக்க வேண்டாம். அது மிகவும் தாமதம்!



No comments: