Sunday, June 10, 2012

அஹ்மத் தாவூத் ஒக்லு -நவீன துருக்கியின் வெளியுறவுக் கொள்கைச் சிற்பி-

'நாம் எமது மதம் மற்றும் அடையாளம் குறித்துப் பெருமையடைகிறோம். அதேவேளை நாம் ஐரோப்பிய கலாசாரத்தினதும் வரலாற்றினதும் ஒரு பகுதியாகவும் இருக்கிறோம். இதனையும் நாம் பெருமையாகக் கொள்கிறோம்.'


அல்ஜஸீரா ஊடகவியலாளர் ராகே ஒமாரிடம் இந்தக் கருத்தைச் சொன்னவர் துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் அஹ்மத் தாவூத் ஒக்லு. இஸ்லாமிய உலகுடன் சிறந்த உறவை கட்டியெழுப்பி வருகின்ற அதேவேளை மேற்குலகுடனும் சிறந்த உறவை பேண விரும்புகின்ற இந்த வகை அணுகுமுறையை துருக்கியின் வெளியுறவுக் கொள்கையாகக் கொண்டு வருவதில் அதிகம் பங்காற்றியவராக தாவூத் ஒக்லுவைக் குறிப்பிடலாம்.

1956 பெப்ரவரி 26ம் திகதி Konya என்ற ஊரில் பிறந்த தாவூத் ஒக்லு, இரண்டாம் நிலைக் கல்வியை ஸ்தான்பூல் உயர் பாடசாலையில் பெற்றார். 1983ல் பொஸ்பொரஸ் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் பட்டப்படிப்பை முடித்த தாவூத் ஒக்லு, முதுமாணிக் கற்கை நெறியையும் தொடர்ந்தார். பின்னர் பொஸ்பொரஸ் பல்கலைக்கழகத்திலேயே அரசறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையில் கலாநிதிப் பட்டத்தை நிறைவு செய்தார்.

1990ம் ஆண்டு மலேஷியாவில் அமைந்துள்ள சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக இணைந்து கொண்ட தாவூத் ஒக்லு, அங்கு அரசறிவியல் பீடத்தை ஸ்தாபித்து 1993 வரை அதன் தலைவராகவும் செயற்பட்டு வந்தார். 1995 முதல் 1999 வரை மர்மரா பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு கற்கைகள் பீடத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றினார். 1998 முதல் 2002 வரை இராணுவ எகடமியில் வருகைதரு விரிவுரையாளராகவும் கடமையாற்றினார் தாவூத் ஒக்லு.

துருக்கி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்பான பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார் இவர். இவை ஜப்பான், போர்த்துக்கல், ரஷ்ய, அறபு, பாரசீக, அல்பேனிய மொழிகளில் மொழிபெயர்ப்புக்களாக வெளிவந்துள்ளன.
தாவூத் ஒக்லுவின் இந்த கல்விப் பின்னணிதான், அவர் 2009 மே மாதம் 01ம் திகதி வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னரே 8 வருடங்களாக பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகராகவும் வெளிவிவகார அமைச்சர்களின் ஆலோசகர்களாகவும் இருக்கும்படி செய்தது எனலாம்.

துருக்கி தன்னைச் சூழவுள்ள அறபுக்களுடனும் குர்திஷ்களுடனும் பல நூற்றாண்டு கால வரலாற்று மற்றும் புவியியல் ரீதியான உறவைக் கொண்டிருக்கின்றது. எனவே, துருக்கி ஒரு பிராந்திய வல்லரசாக வர முடியும் என்று நம்புகிறார் தாவூத் ஒக்லு. அதற்கேற்றாற் போல் அயல்நாடுகளுடனான உறவுகளையும் அமைத்து வருகின்றது துருக்கி.

பிராந்திய வல்லரசாக அல்லது குறைந்தபட்சம் பிராந்தியத்திலுள்ள நாடுகளுடன் சிறந்த உறவைப் பேணுவதற்கான முன்மாதிரியை துருக்கியிடமிருந்து பெறலாம். இலங்கையும் கூட துருக்கியின் இந்த வெளியுறவுக் கொள்கையிலிருந்து நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது. இந்தியாவுடன் சீனாவுடனும் உறவைப் பேணுகின்ற அதேவேளை மேற்குலகையும் நல்ல முறையில் கையாளும் திறனை இலங்கை வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.

100 க்கும் மேற்பட்ட உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ள தாவூத் ஒக்லு, பல அயல் நாடுகளுடனான விஸா நடைமுறையையும் ரத்துச் செய்துள்ளார். அயல்நாடுகளுடனான சிறந்த உறவை ஏற்படுத்துவதில் இந்த வழிமுறை மெச்சத்தக்கது.

தாவூத் ஒக்லு எழுதிய நூல்களுள் அவர் எழுதி அரபு மொழியிலும் மொழிபெயர்ப்பாக வெளிவந்த 'அல்உமுக் அல்இஸ்திராதீஜி' என்ற நூல் மிகவும் முக்கியமானது. இதில், ஆசிய ஐரோப்பிய பால்கன் பின்னணிகளைக் கொண்டிருக்கின்ற துருக்கி தனது வெளியுறவுக் கொள்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என ஆய்வு செய்கிறார் அவர்.

துருக்கியில் நிலவி வந்த கிலாபத் 1924 இல்லாதொழிக்கப்பட்டு மதச்சார்பற்ற கமால் அதாதுர்க்கின் அரசியல் முறைமை அறிமுகப்பட்டது தொடக்கம் துருக்கி தனது சர்வதேச அந்தஸ்த்தை இழந்து சாதாரண ஒரு நாடாகவே கணிக்கப்பட்டது. இதற்கான காரணம் இஸ்லாமிய கிலாபத் நிலவிய காலப்பகுதியில் அதன் கீழிலிருந்த நாடுகளுடன் சிறந்த இராஜதந்திர உறவை பேணுவதில் துருக்கி கொண்டிருந்த திறமையின்மையாகும். 


அதாதுர்கின் ஆட்சி முறை வழக்குக்கு வந்ததிலிருந்து  துருக்கி அதன் சர்வதேச அரசியல் முக்கியத்துவத்தை இழந்து வந்த நிலையில் மிதவாத இஸ்லாமியப் போக்கை கடைபிடிக்கும் தற்போதைய அர்தூகானின் அரசாங்கம் அந்த இழந்த முக்கியத்துவத்தை மீண்டும் பெற்றுவருவது முழு உலகிலும் இஸ்லாமியவாதிகளின் நம்பிக்கையை அதிகரித்து வருகின்றது. அதில் ஒக்ளுவின் பங்கு என்றும் நினைவு கூறப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

இலங்கையின்  புலமைகளும் மிகத் தீவிரமாக தாவூத் ஒக்ளுவின் சிந்தனைகளையும் நகர்வுகளையும் கற்க வேண்டிய தேவையிலுள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு முகாமுக்கும் சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட அடுத்தட முகாமுக்கும் இடையில்  சிக்கிக் கொள்ளாது, இரு முகாம்களுடனும் சிறந்த உறவை பேணுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்ற துருக்கிய வெளியுறவுக் கொள்கையை இலங்கையும் மிகத் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. 

எமது முஸ்லிம் சூழலிலும் தாவூத் ஒக்ளுவின் சிந்தனைகள் கருத்துப் பகிர்வுகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அவரது புத்தகங்கள் பேசும் சிந்தனைகள் ஆய்வுகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.



No comments: