'நாம் எமது மதம் மற்றும் அடையாளம் குறித்துப் பெருமையடைகிறோம்.
அதேவேளை நாம் ஐரோப்பிய கலாசாரத்தினதும் வரலாற்றினதும் ஒரு பகுதியாகவும் இருக்கிறோம்.
இதனையும் நாம் பெருமையாகக் கொள்கிறோம்.'
அல்ஜஸீரா ஊடகவியலாளர் ராகே
ஒமாரிடம் இந்தக் கருத்தைச் சொன்னவர் துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் அஹ்மத் தாவூத்
ஒக்லு. இஸ்லாமிய உலகுடன் சிறந்த உறவை கட்டியெழுப்பி வருகின்ற அதேவேளை மேற்குலகுடனும்
சிறந்த உறவை பேண விரும்புகின்ற இந்த வகை அணுகுமுறையை துருக்கியின் வெளியுறவுக் கொள்கையாகக்
கொண்டு வருவதில் அதிகம் பங்காற்றியவராக தாவூத் ஒக்லுவைக் குறிப்பிடலாம்.
1956 பெப்ரவரி 26ம் திகதி Konya என்ற ஊரில் பிறந்த தாவூத் ஒக்லு, இரண்டாம் நிலைக் கல்வியை
ஸ்தான்பூல் உயர் பாடசாலையில் பெற்றார். 1983ல் பொஸ்பொரஸ் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் பட்டப்படிப்பை
முடித்த தாவூத் ஒக்லு, முதுமாணிக் கற்கை
நெறியையும் தொடர்ந்தார். பின்னர் பொஸ்பொரஸ் பல்கலைக்கழகத்திலேயே அரசறிவியல் மற்றும்
சர்வதேச உறவுகள் துறையில் கலாநிதிப் பட்டத்தை நிறைவு செய்தார்.